சென்னை

ன்று முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ. 60 என விற்கப்பட உள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று தக்காளி விலையேற்றம் தொடர்பாக கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பிறகு அமைச்சர் பெரிய கருப்பன்,

“முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆனால் அண்டை மாநிலங்களில் பெய்த கனமழையினால் தக்காளி விளைச்சல் குறைந்ததால், தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுவதால் மீண்டும் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் தற்போது தமிழகம் முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இன்று முதல் தக்காளி விற்பனையை 500 ரேஷன் கடைகளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது சென்னையில் 100 ரேஷன் கடைகளிலும், கோவை, மதுரை, சேலம், திருச்சி  மாவட்டங்களில் 20 கடைகளிலும்; செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் 15 கடைகளிலும்; கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் 10 கடைகளிலும்; அரியலூர், கன்னியாகுமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டங்களில் 5 கடைகளிலும் என தமிழ்நாடு முழுவதும் 500 ரேஷன் கடைகளில் 1-ந்தேதி (இன்று) முதல் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

விலையேற்றத்திற்குக் காரணம், விளைச்சல் குறைவு மற்றும் பக்கத்து மாநிலங்களில் வரத்துக் குறைவே ஆகும். இது இயற்கையான விலையேற்றமே தவிர, செயற்கையானது அல்ல. முதல்வரின் உத்தரவின்படி தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர இது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதே தவிர செயற்கை தட்டுப்பாடு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை”

என்று தெரிவித்துள்ளார்.