சென்னை

மிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.500 அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வெண்ணிலா நியமிக்கப்பட்டார்.   இவர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான வழக்கை 2016 ஆம் ஆண்டு விசாரித்த உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 8 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அதன் பிறகும் மனுதாரரின் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதையொட்டி ஏற்கனவே மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக  மூன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி, 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என 2,148 நாட்கள் கால தாமதத்துடன் மனுத்தாக்கல் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இவ்வாறு தாமதமாக வழக்கு தாக்கல் செய்ததற்காக பள்ளிக்கல்வித்துறைச் செயலருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து இந்த தொகையை ஒரு வாரத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.