சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தயாரிப்பாளர் துரைக்கு நடிகர் சூர்யா ரூ.2 லட்சம்  ரூபாய் பண உதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிதாமகன், பாபா உள்பட பல்வேறு திரைப்படங்களை தயாரித்தவர் திரைப்பட தயாரிப்பாளர் துரை. இவர் சினிமாவில் ஏற்பட்ட பெருநஷ்டத்தால் துவண்டு போனவர், தற்போது,  சர்க்கரை வியாதி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெறுவதற்கு கூட போதுமான பணம் இல்லை என்றும், அதனால்,  மருத்துவ உதவி வேண்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த பாபா படம் மற்றும்,  பாலா இயக்கி வெளியான பிதாமகன், விஜயகாந்த் நடிப்பில் வெளியான கஜேந்திரா போன்ற பல படங்களைத் தயாரித்தவர் வி.ஏ.துரை. EVERGREEN MOVIES என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி என்னம்மா கண்ணு, லூட்டி உள்ளிட்ட பல படங்களை துரை தயாரித்துள்ளார். முன்னதாக திரைத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தன் அனைத்து சொத்துகளையும் துரை இழந்த நிலையில்,  கடந்த சில ஆண்டுளாக சர்க்கரை வியாதி காரணமாக தயாரிப்பாளர் துரை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூட பணம் இல்லாமல் துரை அவதிப்பட்டு வருவது பற்றி முன்னதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சர்க்கரை வியாதி காரணமாக தனது காலில் உள்ள எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு துரை கடுமையாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படும் தயாரிப்பாளர் துரை இயன்றவர்கள் உதவும்படி இந்த வீடியோவில் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னதாக தயாரிப்பாளர் துரையின் நிலையை அறிந்த நடிகர் சூர்யா அவருக்கு 2 லட்ச ரூபாய் பண உதவி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.