சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும், யாரும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது என்ற எச்சரித்ததுடன், அவ்வாறு நடந்துகொண்டால் அவர்களை மாற்ற வேண்டி நிலை உருவாகும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை (17-ம் தேதி தொடங்குகிறது) இந்த கூட்டத்தொடர் பரபரக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மத ரீதியிலான பிரச்சினைகள் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சட்டப்பேரவையில், அது தொடர்பாக விவாதங்களை நடத்த பாஜக முன்வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் முருகானந்தம், தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் சிவ்தாஸ் மீனா, வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி மற்றும் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளுக்கு தடை விதிப்பதற்கான அவசரச் சட்டம், ஆளுநர் ரவி ஒப்புதலுடன் சமீபத்தில் பிறப்பிக்கப் பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, இதற்கான மசோதா சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கலும் செய்யப்படுகிறது.. அதனால், இந்த சட்ட மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி அனுமதியளிக்கப்பட்டது.

மேலும்,  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், பிடிஆர் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு பயணித்து, பல்வேறு தொழில் முதலீடு களுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்துள்ள நிலையில், நிறைய முதலீடுகள் தமிழகம் வரஉள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. அதனால், தமிழகத்துக்கு வரும் புதிய தொழில்முதலீடுகள், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு அனுமதி, சலுகைகள் அளிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையில், பருவ மழை முன்னேற்பாடுகள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார். அத்துடன், கொள்முதல் செய்யப்படும் நெல்லை மழையில் நனையாத வகையில் பாதுகாப்பது, கிடங்குகள், அரவைக்கு அனுப்வது குறித்தும் இக்கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது. வருவாய், உணவு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் செய்துள்ள முன்னேற்பாட்டு பணிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அமைச்சர்களிடையே பேசிய முதலமைச்சர்,  சட்டப்பேரவையில், அமைச்சர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும் உணர்ச்சிவசப்பட்டு யாரும் எதையும் பேசக்கூடாது என எச்சரித்ததுடன், பேரவையில் எதிர்கட்சியினர் ஆத்திரமூட்டும் வகையில் கேள்வி எழுப்பினாலும், அதற்கு அமைச்சர்கள் கோபப்படாமல் அமைதியாக பதில் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன்,  பொது இடங்களில் பேச்சு தொடர்பான குற்றச்சாட்டுகள் வருவதால், சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டாம்..  கட்சிக்கோ, ஆட்சிக்கோ இழுக்கு ஏற்படும் வகையில்  அமைச்சர்கள் செயல்பட்டால் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்றும்  எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.