டெல்லி: பணமோசடி வழக்கில் சிக்கிய டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை முடிவடைந்த நிலை யில், அவரை  சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்றம், ஹவாலா பணப் பரிவா்த்தனை செய்ததாக கருப்பு பண சட்டத்தின்படி, கடந்த  மே மாதம்  30ஆம் தேதி டெல்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை மத்திய அமலாக்கத் துறையினா் கைது  செய்தனர். கடந்த 2015-16 ஆண்டுகளில் அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் பதவி வகித்தபோது, அவா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களின் பெயா்களில் பதியப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் (ஷெல்) மூலம் ரூ.4.81 கோடி பணப்பரிமாற்றம்  கொல்கத்தாவில் உள்ள ஹவாலா பண முகா்வா்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, டெல்லிக்கு அருகே விவசாய நிலங்கள் வாங்கப்பட்டும், வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் அடைக்கப்பட்டும் உள்ளன என்று குற்றம்சாட்டி சிபிஐ ஆகஸ்ட் 25, 2017-இல் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த நவம்பர் 2019 இல், சத்யேந்திர ஜெயின் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. வருமானத்திற்கு மாறான சொத்து மற்றும் பணமோசடி பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ், சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி பூனம் ஜெயின் மற்றும் குடும்பத்தினரும் சோ்க்கப்பட்டனா்.  இதைத் தொடர்ந்து, வருமான வரித்துறையினா் பணப் பரிவா்த்தனை தொடா்பான விசாரணையை நடத்தி, சத்யேந்தா் ஜெயினின் பினாமி சொத்துகளை முடக்கலாம் என்று ஒப்புதல் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அமலாக்கத்தறை அவரை காவலில் எடுத்து  விசாரணை செய்துவந்தனர். அவர்மீதான காவல் முடிந்தால் சத்யேந்திர ஜெயின் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் சத்யேந்தர் ஜெயின் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது நாளை விசாரணை நடைபெறும்  என்று நீதிமன்றம் அறிவித்தது.