சென்னை: கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலக்கிய அரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம்  நடைபெற உள்ளதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ந்தேதி நடைபெற உள்ளது. வரும்  99-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை யில் இலக்கிய அரங்கம், கவியரங்கம், நாட்டுப்புற இசையரங்கம், தெம்மாங்குத் தேனரங்கம், கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெறும் என்று சென்னைதெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்  வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 4-ம் தேதி மாலை 5மணிக்கு வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்.நகரில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடக்கும் இலக்கியஅரங்கில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடக்க உரையும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலை உரையும் ஆற்றுகின்றனர்.

ஜூன் 5-ம்தேதி மாலை 5மணிக்கு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் மண்டபத்தில் நடைபெறும் கவியரங்கத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் உரையாற்றுகிறார்.

7-ம் தேதிமாலை 5 மணிக்கு செம்மஞ்சேரியில் நடக்கும் நாட்டுப்புற இசையரங்கத்தை துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியும்,

9-ம் தேதி மாலை 5மணிக்கு சைதாப்பேட்டை – வேளச்சேரி சாலையில் நடைபெறும் தெம்மாங்குத் தேனரங்கத்தை துணைப்பொதுச் செயலாளர் க.பொன்முடியும்,

12-ம் தேதி மாலை 5மணிக்கு எம்ஜிஆர் மார்க்கெட்டில் நடக்கும் கருத்தரங்கத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவும் தொடங்கி வைக்கவுள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.