சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் ஒருமுறை பதிவு கணக்கு வைத்திருப்பவர்கள் உடனே தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யும்படி, டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.  இது தொடர்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள  வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

தமிழகஅரசில் காலியாக உள்ள பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த தேர்வுகளை எதிர்கொள்பவர்கள், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தங்களது படிப்பு சம்பந்தமான சான்றிதழ்களை பதிவு செய்து வைத்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்துள்ளவர்கள், தங்களது ஆதார் எண்ணையும் இணைக்கும்படி டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் நினைவூட்டி உள்ளது.

இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைபடுத்தி வருகிறது. மேலும், தெரிவு முறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவு செய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுப்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வாளர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைத்து, எதிர்காலத்தில் தேர்வாணை யத்தால் வெயியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 மேலும் இதுகுறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி அல்லது helpdesk@tnpscexams.in, grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.