திருப்பூர்: திருப்பூரில் 2 பேரை கடித்து குதறிய சிறுத்தை நகராட்சி பகுதிக்குள் புகுந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து,  பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வனப்பகுதியில் நடமாடி வரும் வனவிலங்குகள் அருகே உள்ள கிராமங்களிலும் புகுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 24ந்தேதி  அவிநாசியை அடுத்து பாப்பாங்குளம் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்குள்ள விவசாயிகள், வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர்  5 பேரை தாக்கிவிட்டு எஸ்கேப்பானது. அதைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால், அநத சிறுத்தையானது, ஊருக்குள் புகுந்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு பாப்பாங்குளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருமாநல்லூர் அருகே நடமாடி உள்ளது. இதையடுத்து,  வனத்துறையினர், சிறுத்தையின் காலடி தடங்கள், எச்சங்கள் என ஏதாவது உள்ளதா? என தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது பொங்கு பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சிறுத்தை தங்கியிருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த பகுதிகளில் சுமார் 20 சென்சார் காமிராக்களைக் கொண்டு வனத் தடுப்பு காவலர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.  இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் நாய் திடீரென மாயமானது. அதனை தேடியபோது அங்குள்ள கிணற்றின் அருகில் நாய் இறந்து கிடந்தது. நாயின் பாதி உடல் மட்டும் கிடந்ததால் தப்பித்த சிறுத்தை தான் அந்த நாயை அடித்து தின்று விட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சிறுத்தையை வனத்துறையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில்,  நேற்று  காலை திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள  விவசாயி ராஜேந்திரன் (வயது 55) என்பவரை கடித்து குதறியது. சிறுத்தை கடித்து குதறியதில் ராஜேந்திரன் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து,  சிறுத்தையை விரட்டுவதற்காக பனியன் நிறுவனத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் உள்ளே சென்றார். அப்போது அவர் மீதும் சிறுத்தை பாய்ந்து கடித்து குதறியது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் அலறல் சத்தம் போட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் பாப்பாங்குளம், பொங்குபாளையம் பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறையினர் அம்மாபாளையம் பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால் சிறுத்தை அங்கு சிக்காத நிலையில், நகரப்பகுதிக்குள் புகுந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்து உள்ளனர்.  சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.