டெல்லி: 25 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாத 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பேரவையின் விவாதத்தின்போது,  மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த மத்தியஅரசு  “இந்த மசோதாவைப் பற்றி ஆலோசித்து வருகிறோம்” என்று ஒரே பதிலையே மீண்டும் மீண்டும் கொடுத்து வருகிறது.
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி,  மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது இந்தப் பிரச்னையை எழுப்பியதுடன், மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு செய்வதற்கான 33% மகளிர் இடஒதுக்கீடு  மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. “இது ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.  ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை.

இந்த (பாஜக தலைமையிலான) அரசாங்கம் தங்கள் தேர்தல் அறிக்கையில் மசோதாவை நிறைவேற்றுவதற்காக (பாராளுமன்றத்தில்) கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தது, ஆனால் அவர்கள் அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை, ”என்று குற்றம் சாட்டியவர்,

2014மற்றும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தனது அறிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை சட்டத்திருத்தம் மூலம் வழங்க உறுதி பூண்டுள்ளது. 2014ல் இருந்து இந்த மசோதா குறித்து 22க்கும் மேற்பட்ட கேள்விகள் உறுப்பினர்களால் கேட்கப்பட்டதாக கனிமொழி கூறினார்.  ஆனால் அதே பதில்களை அரசு ஆழ்ந்த ஆய்வு செய்து வருகிறது, அதை கவனமாக பரிசீலித்து வருகிறது,” என்றே கூறி வருகிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை, காலம் தாழ்த்தாமல்  உடனே  நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியவர், 25 ஆண்டுகளாகியும், நிறைவேற்றப்படாத மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என்று கேள்வி எழுப்பினார்.