சென்னை: ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, வாளி மற்றும் துப்புரவு உபகரணங்களுடன் நீதிமன்ற வளாகத்தை துய்மைப்படுத்த உள்ளேன் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற வளாகத்தை சுத்தப்படுத்த சென்னை மாநகராட்சி  துப்புரவு பணியாளர்கள் இருந்தும், சரியான முறையில் சுத்தப்படுத்தப்படாமலும், அங்குள்ள நீதிபதிகள் சிலைகள் பறவைகளின் எச்சங்களால் அழுக்குற காணப்படுவதைத் தொடர்ந்து, தானே  நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்த உள்ளேன் என்று தலைமை நீதிபதி   அறிவித்து உள்ளார்.

ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவரது மனுவில், சென்னை உயர் நீதிமன்ற வளாகம் குப்பை கூளங்களாக காணப்படுகிறது. ஆகவே, நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,   மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மருத்துவமனையை உபயோகப்படுத்த முடியவில்லை . மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டடங்கள் இன்னும் மாற்றப்படாத நிலையில் உள்ளது.  வளாகம் முழுவதும் குப்பை கூழங்களாக உள்ளது. ஆகவே  நீதிமன்ற வளாகத்தை சுத்தப்படுத்தி,  தூய்மையாகவும் பசுமையாக மாற்றி பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், உயர்நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணிகளுக்காக , 19 துப்புரவுப் பணியாளர்கள் உள்ளதாகவும், அவர்கள் நீதிமன்ற வளாகம் முழுவதும் தூய்மை பணியை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட தலைமைநீதிபதி,  நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் துய்மைப்படுத்தப்படாமல் இருப்பதை தான் கவனித்து வருவதாகவும், பல இடங்களில் சுத்தப்படுத்தப்படாமல் குப்பை கூளங்களாக காணப்படுதாகவும் கூறியதுடன், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று தானே நேரடியாக ஒரு வாளி மற்றும் துப்புரவு உபகரணங்களுடன் நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக அதிரடியாக தெரிவித்தார்.

மேலும், தனது துப்புரவு பணியின்போது, தன்னுடன் இணைந்து பணியாற்றி அனைத்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களும்  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.