சென்னை: பணி நியமனத்துக்காக ஒருவர் மதம் மாறினால், அவர் உடனே  பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வி தகுதி இல்லாமல் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்றது தொடர்பாக, அவரது உதவி உயர்வை ரத்து செய்யக்கோரி கோவையைச் சேர்ந்த ரமேஷ், ராம்குமார், கனகராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர், தன் கல்வித்தகுதி சான்றிதழை பல்கலைக்கழக விசாரணையின் போது  தாக்கல் செய்யவில்லை என்றும், உரிய கல்வி தகுதி பெறாத அவரது நியமனமும், பதவி உயர்வும் சட்டவிரோதமானது என்பது உறுதியாகி உள்ளதால், தகுதியில்லாத நபரை  ஓய்வுபெற அனுமதித்த பல்கலைக்கழகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், அவரை நியமனம் செய்ய பரிந்துரைத்த தேர்வுக் குழுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி,   பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனம் செய்யும் போது வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி நிறுவனங்கள் பணிநியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு முன், விண்ணப்பதாரர் பெயர், கல்வி தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விபரங்களை பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகை மற்றும் இணையதளங்களில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பணியாளர் தகுதி குறித்த கேள்வி எழும்போது அது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், நேர்முகத்தேர்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதி,

விண்ணப்பதாரர்கள் யாரேனும் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டால் அதனை விரைந்து ரத்து செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கிய ஊதியத்தை தேர்வுக் குழு உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

போலி ஆவணங்கள் அல்லது சான்றுகள் அளித்து விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்ந்து இருப்பதாக கண்டறிந்தால் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்களை அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இட ஒதுக்கீட்டின் கீழ் பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.