சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக  போட்டியிடும் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  மதியம் 12 மணிக்கு மேல் தனது வேட்புமனுவை அயனாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக உள்பட பெரும்பாலான கட்சிகளில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனல்பறக்கும் தேர்தல் பரப்புரைகளும் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், 12ந்தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும்  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று (15.03.2021) வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக அரசியல் களத்தில் 60ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின்,  1984ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டார். தற்போது 9வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஸ்டாலின் 3வது முறையாக கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஸ்டாலின் ஏற்கனவே கடந்த 2011 மற்றும் 2016 ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.