சென்னை: பிப்ரவரி 21ந்தேதி சென்னையில் மநீம கட்சி மாநாடு நடைபெறும் என அந்த கட்சித்தலைவர்  கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மக்கள் நீதி மய்யம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாம்  வேடிக்கை மனிதரும் அல்ல. வேடிக்கை பார்ப்பவரும் அல்ல. ஆட்சி  அதிகாரத்துக்கு காத்திருக்காமல், ஓட்டு அரசியல் செய்யாமல், தமிழகத்தின்  மீதான உண்மையான அக்கறையில் கிராம சபைகள் மீட்டெடுப்பு, ஸ்டெர்லைட் போராட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர்கால நிவாரண பணிகள், நாமே  தீர்வு என்று தொடர்ச்சியாக செய்து வரும் களப்பணிகளும், சட்டப் போராட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கட்சியின் மரபணுவான நேர்மை, திறமை, அஞ்சாமை ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டுபவை.

தமிழகத்திலும், புதுவையிலும் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறோம். 4வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையிலும், தேர்தல் சம்பந்தமாகவும் வரும் 21ம் தேதி சென்னையில் பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டுக்கு வர வேண்டும். பழிபோடும் அரசியல், பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, வழிதேடும் அரசியல், வழிகாட்டும் அரசியலுக்கு தொடக்க உரை எழுதுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.