சென்னை: கொரோனா நெறிமுறைகள் காரணமாக சட்டமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும் என்றும், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடிகளுடன் மேலும்  2,369 துணை வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அலுவலருமான பிரகாஷ் கூறினார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,  துணை வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மேலும், சென்னை மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாகவும்,  அகில இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளபடி,  1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில்,  துணை வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அலுவலர் பிரகாஷ்,  சென்னையில் ஏற்கனவே, 16 சட்டமன்ற தொகுகள் உள்ளன.  இவற்றில், தேர்தலுக்காக 901 இடங்களில் 3,754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தற்போது,   1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கப்பட்டு வருவதால், மேலும், 2,369 துணை வாக்குச்சாவடிகள் புதியதாக அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த புதிய வாக்குச்சாவடிகள்  ஏற்கனவே வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கூடுதலாக  1,053 இடங்களில் மொத்தம் 6,123 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் உட்பட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும்.

இது தொடர்பாக வாக்குச்சாவடி மையங்களில் வரைவு பட்டியலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் துணை ஆணையர் மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பெர்மி வித்யா,  மண்டல அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.