பொதுவுடமை பொழிந்த பாட்டு அருவி…
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலைவெங்கடேசன் முகநூல் பதிவு…
ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் இப்படித்தான் ஆரம்பிக்கும்..
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எம்ஜிஆர் சொன்னார். ”நான் அமர்ந்துள்ள சிமமாசனத்தை தாங்கிப்பிடிக்கும் நான்கு கால்களில் ஒன்று, மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினு டையது” என்று.. உண்மையிலேயே அப்படித்தட்ட புரட்சிகர தளத்தை எம்ஜிஆருக்கு சினிமாவில் அமைத்துக்கொடுத்தவன் பட்டுக்கோட்டை..
1957ல் சக்ரவர்த்தி திருமகள் படத்தில், ‘மனுஷன் பொறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது’ பாடலில்,
புரளி கட்டி பொருளை தட்டும்
சந்தை பச்சை புளுகை விற்று
சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும்
காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை
சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் – நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் –
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா
இப்படி சமூகத்தின் யோக்கியதையை பிரித்து மேய்ந்தான் ப.கோ.க. அதே ஆண்டின் இன்னொருபடமான மகாதேவியில், தாயத்து தாயத்து என்றொரு பாடல்.
உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
– என சவுக்கால் அடித்தான் அந்த கவிஞன்.
இதன்பின்னர் பட்டுக்கோட்டையை எம்ஜிஆர் விடுவதாக இல்லை. தொடர்ந்து தன்னுடைய படங்களில் அவரை பிரச்சார களத்திற்கு அருமையாக பயன் படுத்திக்கொண்டார்ர்.
தூங்காதே தம்பி தூங்காதே
காடுவௌச்சென்னா மச்சான் நமக்கு கையும்காலும்தானே மிச்சம்
சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா
என வரிசையா போன கவிஞன்,
திருடாதே படத்தில் முத்தாய்ப்பாய் திருடாதே பாப்பா திருடாதே என ஆரம்பித்து,
‘திருடராய் பார்த்த திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’என்று பொட்டில் அறைந்தார்போல் உண்மையை தீர்க்கமாக சொல்லி முடித்தான்.
இன்றுவரை அதேதானே நிலைமை..எந்த வகையான திருட்டை சட்டம் போட்டு நாம் முழுவதுமாக ஒழித்திருக்கிறோம்? பணத்துக்காக, ஆட்களுக்காக என எதையும் பாராமல் அடித்தள வர்க்கத்தின் வார்த்தைகளை கொட்டிய அருவி அவன். அதனால்தான், குறுகிய காலத்தில் மக்கள் கவிஞன் என்று பெயரடுக்க முடிந்தது.
பட்டுக்கோட்டையை பொறுத்தவரை புரட்சிகரம் மட்டுமல்ல, காதல், வீரம் சோகம், தத்துவம் நகைச்சுவை என எல்லா தளங்களிலும் எளிமையாக இயங்கிவன் காதலன் கையை தொட்டதற்கே,, பொறுமை இழந்தி டலாமோ பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ..நான் கருங்கல்லு சிலையோ காதலெனக்கில்லையோ, வரம்பு மீறுதல் முறையோ… என பெண்மையின் மென்மையான கண்டிப்பை நயமாக உரைத்த கல்யாணபரிசு பட பாடல்..
கையில வாங்கினேன் பையில போடலே காசு போன இடம் தெரியலை..
காதலி பாப்பா காரணம் கேப்பா,, என யதார்த்த பொருளாதார பாடலில் பாப்பா என்கிற வார்த்தை மூலம் தமிழ்திரையுலகின் ஜாம்பவானின் எக்ஸ்ட்ரா சமாச்சாரத்தை நாசுக்காக கலாய்த்த அந்த துணிச்சல் வேறு யாருக்கு வரும்…
எழுதிய பாட்டுக்கு பணம் தராமல் இழுத்தடித்து காத்துக்கிடக்கும்படி நிற்கச்சொன்ன இன்னொரு பெரிய சினிமா ஜாம்பாவனுக்கு,
”தாயால் வளர்ந்தேன் தமிழால் அறிவு பெற்றேன்
நாயே நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்
நீ யார் என்னை நிற்கச்சொல்ல?”
என்று துண்டுசீட்டில் எழுதி துப்பிவிட்டு போன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் தன்மான வரலாறு தமிழ் சினிமா உலக வரலாற்றில் பலருக்கும் மனப்பாடம். பெரும்பாடம்,
வாழ்க்கையே இவ்வளவுதாண்டா என்று பாசவலை யில்…
குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம் ,
குள்ள நரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம் ;
தட்டுக் கெட்ட மனிதன் கண்ணில் பட்டதெல்லாம்
சொந்தம் .,சட்டப்படி பார்க்கப் போனா எட்டடி தான் சொந்தம் ! “
என்று பேராசைகாரர்களை போட்டு பொளந்த விதம்.. அதையெல்லாம் விவரிக்கவே முடியாது.
இந்த ஒடிசலான ஆளுக்குள் இவ்வளவு பாட்டு திறமையா என கவியரசு கண்ணதாசனே மெய்மறந்து வியந்த தருணங்கள் நிறைய
இத்தனைக்கும் பட்டுக்கோட்டை சினிமாவில் நுழைந்து பாட்டெழுதியது மொத்தம் நான்கே ஆண்டுகள்தான். அதிகபட்சம் 180 பாடல்கள்..
29 வயதிலேயே இயற்கை அவனை திரும்பப் பெற்றுகொண்ட போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துபோனது. ஏனெனில் பாமரர்களின் வாயில் அடிக்கடி முணுமுணுப்பானது அவன் பாடல்கள்தானே
அவன் இறந்த பிறகு படங்களில் இடம்பெற்ற அவனது பாடல்களை கேட்டவர்களெல்லாம், பட்டுக்கோட்டை இளவயது மரணத்தை பற்றி ஆதங்கப்படாமல் இருந்ததே இல்லை.
சென்ற நூற்றாண்டு தமிழர்களில் அதிசயப்பிறவிகள் பாரதியும் பட்டுக்கோட்டையும்,, இருவருமே இள வயதில் கரைந்துபோனார்கள். ஆனால் மக்கள் மனதில் நிலைத்து நிற்பதில் வித்தகர்கள் ஆனார்கள்.
ஏப்ரல் 13ந்தேதி – மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 94-வது பிறந்த நாள்…