சென்னை:
சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது என்றும் 775 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றால் தமிழகத்தில் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களை கண்டறிந்து அந்தப் பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து, 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள அனைத்து நபர்களையும் பரிசோதித்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் இதுவரை, 51 லட்சத்து 31,314 வீடுகளில், 86 லட்சத்து 74,122 நபருக்கு கொரோனா அறிகுறிகள் பரிசோதனை செய்யப்பட்டு 90 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டு உள்ளன.

இதில், மொத்தம் 2,488 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளித்ததில், 1,746 பேர் குணமடைந்து உள்ள நிலையில், மீதமுள்ள 775 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

ராயபுரம், திருவிக நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் அதிகமான கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உள்ளனர்.

 இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேற்கொண்ட இந்த பணியில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 135 பேரும், ராயபுரத்தில் 133 பேரும், திருவொற்றியூரில் 121 பேரும், வளசரவாக்கத்தில் 76 பேரும், கோடம்பாக்கத்தில் 70 பேரும், தேனாம்பேட்டையில் 67 பேரும்,  தண்டையார்பேட்டையில் 44 பேரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இப்பகுதி மக்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும், அத்தியாவசிய தேவைக்கு வீட்டை விட்டு வெளியே வருகையில் அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை

திருவொற்றியூர் – 4 – 121

மணலி – 0 – 9

மாதவரம் – 3 – 18

தண்டையார்பேட்டை – 14 – 44

ராயபுரம் – 46 – 133

திருவிக நகர் – 25 – 16

அம்பத்தூர் – 0 – 10

அண்ணாநகர் – 22 – 135

தேனாம்பேட்டை – 12 – 67

கோடம்பாக்கம் – 20 – 70

வளசரவாக்கம் – 4 – 76

ஆலந்தூர் – 2 – 29

அடையார் – 4 – 9

பெருங்குடி – 6 – 7

சோழிங்கநல்லூர் – 2 – 31