சென்னை: முறைகேடாக நடந்துகொண்ட 9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை விதித்து சென்னை புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தனது கட்சிக்காரரிடம் பெருந்தொகையை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்ட நந்தகோபாலன், குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த பிரபு ஆகியோர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பணி நியமன உத்தரவு வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கடலூரை சேர்ந்த பெருமாள், உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த ரமேஷ், பொன் பாண்டியன், திருவாரூர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய முத்தாட்சி ஆகியோருக்கும் வழக்கறிஞர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் தொடர்புடைய சென்னை சேர்ந்த ரோஜா ராம்குமார் மற்றும் மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன் ஆகியோருக்கு தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.