சென்னை:
தமிழகத்தில் லாக்டவுன் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை  திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழத்தில் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன. ஆனால், முக்கிய வழக்குகள் மட்டும் நீதிமன்றங்களில் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நீதிமன்றங்களை திறக்கக் கோரி, பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,  தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை நாளை முதல் (ஜூன் 1ந்தேதி) பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீதிமன்ற அறைக்குள் 5 வழக்கறிஞர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அறைகளில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு பின் இந்த நடைமுறை மறு ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.