சென்னை: தமிழ்நாட்டில், எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு அறிவிக்கைகளை வெளியிட வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடை பெற்றது. இதையடுத்து,  தமிழ்நாட்டில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக்கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் உள்ள 8 சாலைகளையும் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 8 சாலைகள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், குறிப்பிட்ட 8 சாலைகளும் முக்கிய சுற்றுலா மையங்கள், புனித தலங்களை இணைப்பவை ஆகும்.ஆகவே,  குறிப்பிட்ட 8 சாலைகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வசதியாக அவற்றை நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளாக மாறும் 8 சாலைகள் விவரம்:

  1. திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி சாலை (65 கி.மீ)
  2. வள்ளியூர் – திருச்செந்தூர் சாலை (70 கி.மீ)
  3. கொல்லேகால் – மாதேஸ்வரன் மலை – பாலாறு சாலை (30 கி.மீ)
  4. பழனி – தாராபுரம் சாலை (31 கி.மீ)
  5. ஆற்காடு – திண்டிவனம் சாலை (91 கி.மீ)
  6. மேட்டுப்பாளையம் – பவானி சாலை (98 கி.மீ)
  7. அவினாசி – மேட்டுப்பாளையம் (38 கி.மீ)
  8. பவானி – கரூர் சாலை (77 கி.மீ)