ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இந்த  இடைத்தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்ய  238 வாக்குசாவடிகளும்,  1,404 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு,  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ்-க்கான நேரம் இன்று மாலை 3மணி உடன் முடிவடைந்தது. இதையடுத்த பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த  நிலையில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மற்றும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம்  வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் தோ்தல் பொது பாா்வையாளா் ராஜ்குமாா் யாதவ் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் வேட்புமனுக்களை பரிசீலித்து நிலையை அறிவித்தனா்.

இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேனகா, தேமுதிக வேட்பாளா் எஸ்.ஆனந்த் ஆகிய முக்கிய வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளா் சிவபிரசாந்த் மனுவும் ஏற்கப்பட்டது.

ஓ.பன்னீா்செல்வம் தரப்பு வேட்பாளா் செந்தில் முருகனின் 2 மனுக்களும் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்பாளா் செந்தில் முருகன் மனுக்களை திரும்பப் பெறுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மொத்தம் 96 போ் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் பரிசீலனையின்போது 13 பேரின் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

இன்று (பிப்ரவரி 10) பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. அதில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் உள்பட 6 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது வரை மொத்தம் 77 பேர் போட்டியில் உள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறிய தேர்தல் அலுவலர், ஈரோடு இடைத்தேர்தலுக்கு 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக 1,404 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

தேவைப்படின், கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் பணியும் தொடங்கி இருப்பதாக கூறியவர், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இ மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.