சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தமிழகத்தில் அதிகரிக்காமல் இருந்தது.

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் மார்ச் 13 முதல் 15ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் வரை 500க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் டெல்லியில் இருந்து வந்தவர்களில் நேற்று 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் இன்று மட்டும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.

இதன் மூலமாக ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 234 ஆக இருந்த நிலையில், தற்போது 309 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசின் கோரிக்கையை ஏற்று, மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 1,103 பேர் தானாக முன்வந்து தகவல் தெரிவித்தனர். அவர்களில் 658 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ளவர்களுக்கும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. முடிவுகள் இன்னும் வரவில்லை என்று தெரிவித்தார்.