சென்னை: இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு  திமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக,  மாநிலம்  முழுவதும் இருந்து சென்னை வந்த திமுக தொண்டர்கள், முதலமைச்சருக்கு  வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயத்திலும், கருணாநிதி, அண்ணா நினைவிடம் மற்றும், அவரது ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம் வீடுகள் முன்பும்  ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்திருந்த நிலையில், முற்பகல் 11மணிக்கு மேல் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தார்.

அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திமுக தொண்டர்கள் உற்சாகமாக வாழ்த்துக்கோஷங்களை எழுப்பினர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துரை முருகன், காஜா உள்ளிட்டோர் வாசலில் நின்று வரவேற்றனர். சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் ‘கேக்’ கொண்டு வரப்பட்டது. அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் ‘கேக்’ வெட்டி வழங்கினார். பின்னர் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.  அதன் பிறகு கலைஞர் அரங்கிற்கு சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வரிசையாக வந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்ற மு.க.ஸ்டாலின்  அவர்கள் வழங்கிய மாலைகள், புத்தகங்கள், பழக்கூடைகள் மற்றும் நினைவு பரிசுகளை பெற்று மகிழ்ந்தார்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், திரையுலக பிரபலகங்கள் என பலரும்  அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்தியனார்கள்.  அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தியாகராய நகர் எம்.எல்.ஏ.ஜெ.கருணாநிதி, ஐட்ரீம் மூர்த்தி, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, எழும்பூர் பரந்தாமன் மற்றும் படப்பை மனோகரன், வி.எஸ்.ராஜ், ஐ.கென்னடி, மா.பா.அன்பு துரை, தாயகம் கவி எம்.எல்.ஏ, பாலவாக்கம் விசுவநாதன், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி மாவட்ட அமைப்பாளர் துபாய் வி.ஆர்.விஜய், முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா, துணைத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக அண்ணா கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்த சென்ற   முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக பொதுச் செயலாளர் துரை முருகன், டி.ஆர்.பாலு எம்.பி, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சக்கர பாணி, அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா, பரந்தாமன், புழல் நாராயணன், மதன் மோகன் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் உடன் வந்திருந்தனர்.

கலைஞர் நினைவிடத்தில் அவரது உதவியாளர் கே.நித்யா நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன் மற்றும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்