சென்னை

சென்னை புழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 அலைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. சிறையில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். பலமுறை தண்டனை மற்றும் விசாரணை சிறைகளில் கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது விசாரணை மற்றும் தண்டனை சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. காவல்துறையினர் கைதிகளிடம் அதிரடி சோதனை நடத்தியபோது விசாரணை சிறையில் இலங்கையைச் சேர்ந்த அலெக்சாண்டர் (40) என்பவர் தங்கியுள்ள அறை கழிவறையில் 2 செல்போன், சிம்கார்டு, பேட்டரி சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது

தண்டனை சிறையில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரகுமான் (32), நார்வே நாட்டை சேர்ந்த இஸ்ரோ அகஸ்தியன் (46), அலோசிய டேவிட் (50), கொலம்பியா நாட்டை சேர்ந்த எட்வின் ஹென்றி (48) ஆகிய கைதிகள் கழிவறை பின்புறம் செல்போனில் பேசியதைப் பார்த்து மடக்கி பிடித்தனர். இந்த கைதிகளிடம் இருந்து 5 செல்போன், 5 பேட்டரிகள், சார்ஜர்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறையில் கைதிகளுக்கு செல்போன்கள் எப்படி கிடைக்கிறது. கைதிகளுக்கு சிறைத்துறை காவலர்கள் உடந்தையா? அல்லது சிறையில் இருந்து நீதிமன்றம் செல்லும்போது எடுத்து வந்தார்களா? எப்ன பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.