சென்னை:  ஆதார், வாக்காளர் அட்டை நகல் வழங்க அவசியம் இல்லை; வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்க ‘6பி’ படிவம் போதும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரிசெய்யும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.  ஆதார் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில், ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து,  நாடு முழுவதும் ஆதார் இணைப்புக்கான பணிகள் ஆகஸ்டு 1ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளத்தில் சென்றும் இணைக்கலாம் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், தேசிய வாக்காளர் சேவை அமைப்பான ‘என்விஎஸ்பி போர்ட்டல்’, வாக்காளர் சேவை எண் மூலமாக இந்த இணைப்பை மேற்கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.  மேலும், பொதுமக்கள், அதற்கான  ‘6பி’ என்ற படிவத்தை நிரம்பி கொடுத்தாலும் போனதுமான என தெரிவித்து உள்ளது.

மேலும், வாக்காளர் பதிவு அலுவலர்கள் தாங்கள் பெற்ற படிவத்தில் உள்ள விவரங்களை இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘கருடா’ என்ற செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சத்தியபிரதா சாஹு, நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி ஆதார் இணைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் இதுவரை 97 லட்சம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் ‘6பி’ படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.

அதேபோல, தேசிய வாக்காளர் சேவை அமைப்பான ‘என்விஎஸ்பி போர்ட்டல்’ (https://www.nvsp.in ), வாக்காளர் சேவை எண் ‘1950’ போன்றவற்றின் மூலமாகவும் வாக்காளர்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.

‘6பி’ படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி செல்போன் எண்ணை அளிக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணை மட்டுமே கொடுத்தால் போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.