சென்னை: நடப்பாண்டிலேயே மருத்துவப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசின் நிலைபாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, திமுக சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த இடஒதுக்கீடு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த ஆண்டிற்கு ஒதுக்கீடு வழங்குவது என்பது சாத்தியமில்லாதது என தெரிவித்தனர்.

அடுத்த கல்வியாண்டில், அதாவது இந்த கல்வியாண்டில் எவ்வளவு சதவீதம் அமல்படுத்த முடியும் என அறிவித்து விட்டு, இந்த ஆண்டு சேர்க்கையில் அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இதுதொடர்பாக இந்திய அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு எவ்வாறு அமல்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், அதனை எவ்வாறு அமல்படுத்த உள்ளீர்கள் என ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.