கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 650 போலீசாருக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மிகவும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களைக் கட்டுப்படுத்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பயிற்சிக்காகச் சென்ற காவல் ஆய்வாளர்களும், விடுமுறையில் இருந்த போலீசாரும் பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டது.

அனைவரும் கடந்த 11 நாட்களாக தொடர்ந்து இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். அதனால் பல போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இதையடுத்து இன்று முதல் மாவட்டம் முழுவதும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 650 போலீசாருக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்து எஸ்.பி. பண்டிகங்காதர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மொத்தம் உள்ள போலீசார் 3 பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவு போலீசாருக்கும் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.