டெல்லி: 65 பழமையான சட்டங்களை நீக்கும் வகையில், அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜ்ஜு கூறியுள்ளார்.

பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாகவும், தற்போதைய வளர்ச்சியை பொருத்தும், பழமையான சட்டங்கள் திருத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏற்கனவே கடந்த 1990 தொடங்கியதிலிருந்தே எல்லா துறைகளிலும் சட்டங்களைத் திருத்தும் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  1990 முதல் 2014 வரையில் ஆட்சியில் மத்திய அரசுக சில சட்டங்களை திருத்தி நடவடிக்கை எடுத்தது. பின்னர் 2014ல் ஆட்சி ஏற்ற பாஜக பல்வேறு சட்டங்களை திருத்தி வருகிறது. மேலும் 65 பழமையான சட்டங்களை திருத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே வகையிலான பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

இநத் நிலையில், கோவா மாநில தலைநகர் பனாஜியில் நடைபெற்ற  23-வது காமன்வெல்த் சட்ட மாநாட்டில் பேசிய மத்திய சட்ட அமைச்சர்  கிரண் ரிஜிஜூ, – இன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குடிமகனும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலன் அடைகிறார். நலத்திட்ட நாடு என்பதால், ஒவ்வொரு தனிமனிதரின் குரலையும் கேட்பது முக்கியம். சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ம

க்களுக்காகத்தான் சட்டங்கள் உள்ளன. சட்டங்களே தடைக்கற்களாக மாறும்போது, அவற்றை பின்பற்றுவது சுமையாக இருக்கும். அப்போது, அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். அந்தவகையில் கடந்த எட்டரை ஆண்டுகளில், 1,486 பழமையான, நடைமுறைக்கு பொருந்தாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம்.

13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில் மேலும் 65 சட்டங்களை நீக்க மசோதாவை முன்வைப்போம்.

நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் 4 கோடியே 98 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை குறைப்பது எளிதல்ல. ஏனென்றால், முடிவுக்கு வரும் வழக்குகளை விட 2 மடங்கு புதிய வழக்குகள் வந்து விடுகின்றன. ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார். சில நீதிபதிகள், நாள் ஒன்றுக்கு 200 வழக்குகளை கூட முடித்து வைக்கிறார்கள். இருப்பினும், நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நிலைமையை சமாளிக்க தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இ-கோர்ட்டுகளை தொடங்கி இருக்கிறோம். எங்கள் இறுதி இலக்கு, காகிதமற்ற கோர்ட்டுகள்தான். மத்தியஸ்தம் செய்வதை ஊக்குவிக்க மத்தியஸ்த மசோதாவையும் கொண்டுவர உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவா மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மற்றும் 52 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.