டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில் பெரும்பாலான மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்த பிரச்னைகளை தவிர்க்க ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக ரயில்வே துறை மாற்றி வருகிறது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4,000 ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதுவரை 169 பெட்டிகள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாநிலங்களின் தேவைக்காக நாக்பூர், போபால், இந்தூர் ரயில் நிலையங்களுக்கு பெட்டிகள் அனுப்பப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.