சென்னை:  60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்ட 4  சிலைகள் இங்கிலாந்து, அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கிருந்த  திருமங்கை ஆழ்வார், காளிங்கனார்த்தன கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய சிலைகள் 1957 முதல் 1967-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்று விட்டதாகவும், சிலை இருந்த இடத்தில் போலி சிலையை வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடத்த டிஎஸ்பி. டி.பி.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.

விசாரணையில்   60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன சிலைகளின்  உருவப்படம், புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மூலம் பெறப்பட்டு தேடப்பட்டு வந்தது. அப்போது, அந்த சிலைகள்,  லண்டனில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில்  இருப்பது தெரியவந்தது. அந்தச் சிலையை 1967-ம் ஆண்டு ஜே.ஆர்.பெல்மாண்ட் என்ற சிலை சேகரிப்பாளரிடம் இருந்து 850 டாலர் பணம் கொடுத்து, அந்த அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்துள்ளது. அதுபோல,  காளிங்கனார்த்தன கிருஷ்ணன் சிலை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில் இருப்பதும்,  டெக்சாசில் உள்ள கிம்பெல் கலை அருங்காட்சியகத்தில் விஷ்ணு சிலையும், புளோரிடாவில் உள்ள ஹில்ஸ் ஏல தொகுப்பு மையத்தில் ஸ்ரீதேவி சிலையும் இருப்பது தெரியவந்தது.

இந்த சிலைகள் திருடுபோனதற்கான ஆதாரங்களை காண்பித்து, அந்த 4 சிலைகளையும்  மீட்டுக் கொண்டுவரும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.