சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை  பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் – மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் 6 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது.

திருச்சி-சென்னை இடையிலான ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. தஞ்சை-சென்னை, சென்னை-தஞ்சை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் மைசூரிலிருந்து மயிலாடுதுறை வரை செல்லும் விரைவு ரயில், நவம்பர் 24ம் தேதியுடன் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும். மயிலாடுதுறை-மைசூரு ரயில் சேவை நவ.25ம் தேதி திருச்சியில் நிறுத்தப்படுகிறது.

முன்னெச்சரிக்கை காரணமாக 9 விரைவு ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயில் சேவை நவ.24ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.