சென்னை

மிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இன்று மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் அதிகாரி சீனிவாசன் செய்தியாளர்களிடம், “மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் 13 வேட்பாளர்களிடம் இருந்து 18 வேட்புத் தாள்கள் பெறப்பட்டது. இதில் சு.கல்யாணசுந்தரம், கிரிராஜன், ஆகியோர் திமுக சார்பாக தலா இரண்டு வேட்புமனு அளித்திருந்தார்.மேலும்  சி.வி.சண்முகம் அதிமுக சார்பில் ஒரு வேட்புமனு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் 3 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

தவிர அதிமுகவைச் சேர்ந்த ஆர்.தர்மர் ஒரு வேட்புமனுவையும், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் திமுக சார்பில் இரண்டு வேட்பு மனுக்களை அளித்திருந்தார். இவர்களைத் தவிரச் சுயேச்சைகள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி, தேவராஜன், பத்மராஜன், மன்மதன், வேல்முருகன் சோழகனார் தலா ஒரு மனு அளித்திருந்தனர்.

நேற்று இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.  இவற்றில் 6 வேட்பாளர்களின் 11 வேட்புமனுக்கள் செல்லத்தக்க தாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாறு ஏற்றுக்  கொள்ளப்பட்ட செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அளித்த வேட்பாளர்கள் எவரும் தங்களது வேட்புமனுக்களை இன்று (ஜூன் 3) 3 மணிக்குள் திரும்பப் பெறவில்லை.

இந்த தேர்தலில் காலியிடங்களின் எண்ணிக்கை 6. போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கை 6.இரண்டும் சமமாக உள்ளதால், 1951- ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 53/2- ன்படி, திமுகவைச் சேர்ந்த சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என் ராஜேஸ்குமார், அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.