சென்னை: சென்னை உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், விடுபட்டவர்கள், நிவாரணம் கோரி  தாக்கல் செய்துள்ள மனுக்கள் 6.5எ லட்சம் என்றும் இதுவரை (டிசம்பர் 21ந்தேதி மாலை வரை)  21 லட்சம் பேருக்கு  ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தது. முறையான முன்னெச்சரிக்கை மற்றும் ஏரி, குளங்கள், மழைநீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டு செப்பனிப்படாததால்,  வெள்ளப்பாதிப்பு கடுமையாக ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணமாக தமிழ்நாடு அரசு , ரூ.6 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கி வருகிறது.  இதையடுத்து, டிச.14-ம் தேதிமுதல் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டிச.17-ம் தேதி சென்னை வேளச்சேரியில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, 24.75 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க ரூ.1,437 கோடிஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

இjற்கிடையில், நிவாரணம் வழங்கும் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், மத்திய, மாநில அரசுஉயர் அதிகாரிகள், வருமான வரிசெலுத்துவோர், சர்க்கரை குடும்பஅட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிவாரணத் தொகை கிடைக்காத,பாதிக்கப்பட்ட மக்கள் நியாயவிலைக் கடைகளிலேயே விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். குடும்ப அட்டை இல்லாதவர்கள் வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம், சமையல் எரிவாயு இணைப்பு விவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றுடன் நிவாரணம் வழங்கும் பணி முடிவடைய உள்ளது. முன்னதாக நேற்று காலை  நிலவரப்பட்ட 21 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதுபோல,  பாதிக்கப்பட்டுள்ளதாக விண்ணப்பம் அளிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த டிச.17 முதல் நேற்று முன்தினம் வரை 6.5 லட்சத்தை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவற்றைப் பரிசீலிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,  நிவாரணம் வழங்குவதற்கான பட்டியலில் இடம்பெற்று, டோக்கன் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணத் தொகை  வழங்கப்படவில்லை என்றும், ரேசன் கடையில் பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும்  டோக்கன் பெற்றவர்களககு  எப்போது பணம் கிடைக்கும் என்று கேட்டபோது, பணம் வந்ததும் கொடுப்போம் என்று ரேசன் கடை ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கெனவே தகுதியான பயனாளிகள் யார் என்ற பட்டியல் வெளியிடப்படாத நிலையில், தற்போது பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படுமா? யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.