சென்னை

சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஓராண்டில் 56 நாய்கள் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ ஐ டி வளாகத்தில் ஷெட் அமைக்கப்பட்டு  நாய்கள் பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.  இங்கு சுமார் 46 நாய்கள் இறந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.  எனவே இது குறித்து தமிழக அரசு சார்பில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் ஆய்வு நடத்தினார்.  அவருடன் சென்னை மாநகராட்சி துணை ஆணையர், இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மா சுப்ரமணியன், ”சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்து விட்டதாகச் செய்தி வெளியாகியிருந்தது. மொத்தம் 617 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஐஐடியில் 10,600 சதுர அடி பரப்பில் ஷெட்டுகள் அமைத்து நாய்களைக் கண்காணித்து வருகின்றனர்.  இவற்றில் வெறித்தனம் இல்லாத 14 நாய்கள் வெளியில் விடப்பட்டுள்ளது.

இங்கு ஓராண்டில் 56 நாய்கள் இறந்துள்ளது. செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு விருப்பம் தெரிப்பவர்களுக்கு 29 நாய்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  அந்த பட்டியலையும் கேட்டுள்ளோம். இதுவரை 2 நாய்கள் இங்கிருந்து தப்பித்துச் சென்று தற்போது 87 நாய்கள் பராமரிப்பில் உள்ளது.

ஓராண்டில் 56 நாய்கள் இறப்பிற்கான காரணம் கேட்ட போது வயது முதிர்வின் காரணமாக 8 முதல் 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், மேலும் உடல்நிலை பாதிப்பு காரணமாகவும் என ஓராண்டில் 56 நாய்கள் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஓராண்டில் 16 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாய்கள் பராமரிப்பு சம்பந்தமான பணிகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். தவிர கடந்த 2018ம் ஆண்டில் 92 மான்கள் இறந்துள்ளது. அவற்றில் 55 மான்கள் நாய்கள் கடித்து இறந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை 2019ம் ஆண்டில் 38 மான்கள், 2020ம் ஆண்டில் 28 மான்கள் மற்றும் இந்த ஆண்டு குறைந்து 3 என்கிற  அளவில் நாய்கள் கடித்து மான்கள் இறந்துள்ளது. அவற்றையும் பாதுகாக்கத் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ஐஐடி நிர்வாகத்தினர் இந்த பணிகளைச் செய்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.