சென்னை

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 55 மசாஜ் செண்டர்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்

கடந்த ஒரு மாதத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு சென்னை காவல்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதியில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வருவதாகவும், அங்கு ஸ்பா என்ற பெயரில் மசாஜ் மற்றும் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே சென்னை காவல்துறையின் தனிப்படை காவலர்கள் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது சென்னை பெருநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்து, அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.