ஸ்ரீநகர்:
ம்மு-காஷ்மீரின் இரு வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமத் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 5 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமையன்று காஷ்மீரின் பிஜ்பெஹாரா பகுதியில் காவலர் ஒருவர் அவரின் இல்லத்தின் அருகிலேயே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முழுதும் இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் புட்காம், புல்வாமா ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக இந்திய பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்த சில மணிநேரங்களிலேயே பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களைக் கண்டறிந்தனர். தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் இறுதியில் இந்திய பாதுகாப்புப் படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய காஷ்மீர் மாநில ஐஜி விஜயகுமார், “கடந்த 12 மணி நேரத்தில் இந்திய பாதுகாப்புப் படையினரால் பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் யாரென அடையாளம் கண்டதில், பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தற்போது சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ் இ முகமத் அமைப்பின் கமாண்டர் ஜாஹித் வானி என தெரியவந்துள்ளது. இது இந்திய பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த வெற்றி. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 11 என்கவுன்டர்கள் நடந்துள்ளது, அதில் 21 பயங்கரவாதிகள் நம் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர், இதில் 8 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது”, என்று கூறியுள்ளார்.