சென்னை:  சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கான ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், டிசம்பர் 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த  தேர்தலில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தொடர்பான பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

2024 நாடாளுமன்ற மன்ற தேர்தல் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா, சத்தீஸ்கர் , மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய  5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் 9ந்தேதி அறிவித்தது. அதன்படி,  சத்தீஸ்கர் மாநிலத்தில்  நவம்பர் 7  மற்றும் 17 ஆம் தேதிகளில்  இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. மத்திய பிரதேச மாநிலத்தில் நவ., 17ல்  வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 7 ஆம் தேதி மிசோரம் மாநிலத்திலும்,  நவம்பர் 23 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலும், நவம்பர் 30 ஆம் தேதி தெலங்கானா மாநிலத்திலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்  வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது. இது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது,  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. பின்னர், முக்கிய நிர்வாகி கட்சி மாறி ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், மிசோரம் மாநிலத்தில் சொராம்தங்காவின் எம்.என்.எப் கட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் (பி.ஆர்.எஸ்) கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தனர். இந்த சூழலில் 5 மாநிலங்களில் ஆட்சி காலம் இந்த ஆண்டுடன் நிறைவடையும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

இந்த தேர்தல் மக்களவை தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்பதால் ஆட்சியை  பிடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஒரு தரப்பினர் 5 மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், மற்றொரு தரப்பினர் பாஜக எழுச்சி பெறும் எனவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.  அதன்படி,  சத்தீஸ்கர், தெலுங்கனா, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் , ராஜஸ்தானில் பாஜக, மிசோராமில் மாநில கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளத.

மத்திய பிரதேசம், மிசோரமில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் சமபலத்துடன் உள்ளன. இவ்விரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடிப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) பின்னடைவை சந்திக்கும். காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி (மி.தே.மு) ஜோரம் மக்கள் முன்னணிக்கு (ஜோ.ம.மு) பெரும்பான்மை இடங்கள் கிடைப்பது கடினம். அந்த மாநிலத்தில் இழுபறி நீடிக்கக்கூடும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 C-Voter அமைப்பு  வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,  ராஜஸ்தானில் 114 முதல் 124 தொகுதிகளைப் பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, காங்கிரஸ் 67 முதல் 77 தொகுதிகளை மட்டுமே வெல்லும் நிலை உள்ளது. இதனால் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைகிறது.

மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 203 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பை ரிபப்ளிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், பாஜக 118 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் 97 முதல் 107 தொகுதிகளில் வெல்லும் என்றும், மற்ற கட்சிகள் 0-2 தொகுதிகளில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் பாஜக-வின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது எனத் கருத்துக் கணிப்புத் தகவல் வெளியாகியுள்ளது.