சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை வெளியிட்டார். அத்துடன் தொழில் சம்பந்த சில ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்களுக்கு உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பு உள்ளது. ரூ 20,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் கொள்கை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சென்னை நுங்கப்பாக்கத்தில்  இன்று காலணி மற்றும் தோல் துறை மாநாட்டு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் 2022-க்கான காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கையை வெளியிட்டார்.  அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் முன்னிலையில் 5 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த 5 நிறுவனங்கள் மொத்தம் ரூ.2,250 கோடி முதலீடு ஒப்பந்தம், புதிய கொள்கை மூலம் 37,450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி,  ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் மெகா காலனி தயாரிப்பு பூங்கா அமைக்கப்படுகிறது. காலனி, தோல் பொருட்கள் பிரிவில் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோன்று காலனி தயாரிப்பில் 4 ஆண்டுகளில் 2 லட்சம் வேலை உருவாகும்.

நிகழ்ச்சியில் பேசிய  முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்று ஒராண்டு காலம் முடிவுற்ற நிலையில் இது 7 ஆவது முதலீட்டாளர் மாநாடு. இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த மாநிலத்திலும் நடைபெற்றிருக்கிற வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இது அடையாளம். இயற்கை வளங்களை பாதுகாப்பது நமது கடமைகளில் ஒன்றாக கருத வேண்டும். காலணிகள் ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படையானவை, முக்கியமானவை. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்களுக்கு உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பு உள்ளது. ரூ 20,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் கொள்கை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.