சென்னை: தமிழில் பெயர் எழுதும்போது இனிஷியலும் தமிழில் எழுத வேண்டுமென தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் (initial) தமிழிலேயே எழுத வேண்டுமென தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு தாய் மொழியாம் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதன்படி, அரசு பள்ளிகளில் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விகளில், வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கி உள்ளது. இந்த நிலையில்,  பள்ளி, கல்லூரி மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுத வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உளளது.

 இது தொடர்பாக  தமிழக அரசு  வெளியிடப்பட்ட அரசாணையில், முதல்அமைச்சர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லூரி காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு தமிழை முதன் முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும், தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வர மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரை முன்னெழுத்துடன் வழங்கும் நடைமுறையை கொண்டு வரவேண்டும்.

மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது. கோரிக்கை விண்ணப்பங்களில் பெயரின் முன்னெழுத்தும் (Initials) கையொப்பமும் தமிழில் இட வேண்டுமென பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெயரின் முன்னெழுத்தும், கையொப்பமும் தமிழில் இட வேண்டுமென மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை மேற்கோள் காட்டி பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், மாணவ-மாணவிகள் தங்கள் பெயரை எழுதும்போது இனிஷியலையும் தமிழிலில் தான் எழுத வேண்டும். பதிவேடுகளிலும் அதை பின்பற்றவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.