சென்னை: சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான திட்டம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில்  பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களுடன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், முதன்மை பொறியாளர் சாந்தி, முதன்மை இயக்குநர் கோதண்டராமன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, சாலைகள், பாலப்பணிகள் சுணக்கமின்றி நடைபெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு என்றும், சாலை விரிவாக்கத்தின்போது  நிலம் கையகப்படுத்துவதற்கு தனி அலுவலர் நியமிக்க வேண்டும்  உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒப்பந்த தாரர்கள் பல்வேறு  கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதுகுறித்த முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஆவன செய்யப்படும்.

கடந்த கழக  ஆட்சியில் அறிவித்தபடி, சென்னையில் மேலும்  5 புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்குவது தொடர்பான அறிக்கையை ஏற்கனவே தயார் செய்து தலைமை செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தி விரைவில் ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.