சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல்நாளிலேயே 42,024 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா சூழல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நேரடித்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 10, 12,11ம் வகுப்பு உள்பட உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன.  பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் பிளஸ்2 மாணவர்களுக்கு ஏப்ரல் 5ந்தேதி தேர்வு தொடங்கிய நிலையில், நேற்று (ஏப்ரல் 6ந்தேதி)  10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.

இந்த நிலையில், பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த 9,55,139 பேரில்  42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை, அவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து,  விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க CEO-க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே 5ந்தேதி தொடங்கிய பிளஸ்2 பொதுத்தேர்விலும், 32,674 மாணவர்கள்  தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.