சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு 412 இலவச நீட் பயிற்சி மையங்கள்கள் மூலம் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி வழங்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவ படிப்பில் சேர ஏதுவாக கடந்த அதிமுக ஆட்சியில், 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும், இலவச நீட் பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்பட்டு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதை தற்போதைய திமுகஅரசும் தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் சுமார் 400 அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இநத் நிலையில்,  நடப்பாண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்குவது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி போட்டி தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு 3வது வார சனிக்கிழமைகளில் இருந்து ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.

போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சம் 50 பேரும், 11ஆம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சம் 20 பேரும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.