டோக்கியோ: ஜப்பானில் குறைந்தது வரும் மக்கள் தொகையால் அந்நாட்டு அரசு கவலைகொண்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மொத்த தொகையில் சுமார் 40 லட்சம் பேர் குறைந்துள்ளனர்.

பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரித்து வருவதையே நாம் கண்டு வருகிறோம். ஆனால் ஜப்பானில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை குறைந்து வருகிறது. அதுபோல தென் கொரியாவில்  குறைவான கருவுறுதல் நடைபெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் மக்கள் தொகை அதிகரிப்பதால், மக்கள் தொகையை குறைக்க சொன்ன சீன அரசு, மக்கள் தொகை வெகுவாக குறைந்து விட்டதால், மீண்டும் மக்கள் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி வருகிறது. அதற்காக பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது.

இந்த சூழலில்,  ஜப்பானின் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 2023ம் ஆண்டு  பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதுபோல பிறப்பை விட இறப்பு அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்து உள்ளது. அதாவது, 8 லட்சத்திற்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ளனர். ஆனால், இறப்பை பொறுத்தவரையில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2008ஆம் ஆண்டு, ஜப்பான் மக்கள் தொகை 12 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமாக பதிவானது. இது, ஜப்பான் பதிவு செய்த அதிக பட்ச மக்கள் தொகையாகும். ஆனால், ஜப்பான் மக்கள் தொகை தற்போது 12 கோடியே 40 லட்சமாக சரிந்துள்ளது ஜப்பானின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து, பிறப்பு விகிதத்தை மேம்படுத்த ஜப்பான் அரசு மக்களுக்கு கூடுதலாக ₹ 48,000 வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் புமியோ கிஷிடாவின் உதவியாளர்மசாகோ மோரி  அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஜப்பான் அதன் பிறப்பு விகிதத்தின் வீழ்ச்சியைக் குறைக்க முடியாவிட்டாலோ, தற்போதைய நிலை நீடித்தாலோ  இனி வரும் நாட்களில் ஜப்பானை பார்க்க முடியாது என்றும் இது நாட்டுக்கு மிகவும் ஆபத்து என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜப்பான் விரைவில்,  “அழியப் போகும் சூழலை மக்கள்தான் எதிர்கொள்ள வேண்டும். அவர்கள்தான், அதிக அளவில் தீங்கை எதிர்கொள்ள வேண்டும். மக்கள் தொகை வீழ்ச்சி குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும். அது படிப்படியாக வீழ்ச்சியடையவில்லை. அது நேராக கீழே செல்கிறது. இந்த திடீர் வீழ்ச்சியால், இப்போது பிறக்கும் குழந்தைகள் சிதைந்து, சுருங்கி, செயல்படும் திறனை இழக்க போகும் சமூகத்தில் தள்ளப்படுவார்கள். எதுவும் செய்யாவிட்டால், சமூக பாதுகாப்பு அமைப்பு வீழ்ச்சியடையும். தொழில்துறை மற்றும் பொருளாதார வலிமை குறையும். நாட்டைப் பாதுகாக்க பாதுகாப்பு படைகளுக்கு போதுமான ஆட்கள் இல்லை. குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவதால் இப்போது சரிவை மாற்றுவது மிகவும் கடினம் என்றாலும், வீழ்ச்சியை மெதுவாக்குவதற்கும் சேதத்தைத் தணிக்க உதவுவதற்கும் அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.