நெல்லை: தென்காசி மாவட்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்களிடம் இருந்து, ரூ.4.25 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கள்ள நோட்டுக்கள், போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க கடும் நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கோவையில் பெட்டி பெட்டியாக கள்ள நோட்டுக்கள் பரிமுதல் செய்யப்பட்டது. மேலும், சென்னை அருகே ரூ.10 கோடி ஹவாலா பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது பிஎப்ஐ அமைப்பினருடைய என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  தென்காசி மாவட்டத்தில் கள்ள நோட்டு புழக்கம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரன் மற்றும் தென்மண்டல ஐஜி  தனிப்படை உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்ணன், தலைமை காவலர் கண்ணன் அடங்கிய தனிப்படையினர் கண்காணித்து வந்தனர். பல இடங்களில்வாகன சோதனையும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததபோது, தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வித மாக நடமாடிக்கொண்டு இருந்த  2 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில், அவர்கள்  தென்காசி உடையார் தெருவை சேர்ந்த மணிச்செல்வன் (28), செங்கோட்டை பெரியபிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (24) என்பது தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த பையில் சோதனையிட்டபோது, அதில்,  ரூ.1.20 லட்சம் மதிப்பிலான  4 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்ததுடன், இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ரூ.2.25 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.