சென்னை: கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் வந்த 35 பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா  மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில்  இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த 3 பஸ்களில் 2 பஸ்கள் மட்டுமே அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளது. அதில் இருந்தவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தான் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் ஒரு பஸ்சில் இருப்பவர்கள் விரைவில் கர்நாடகா திரும்ப உள்ளனர்.

மேலும் ஒரு பஸ் தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு சென்றுள்ளது. இதிலும் பலருக்கு தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்கள் கர்நாடகா சென்றதும் அதில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையடுத்து, மேல்மருவத்தூர் கோவில் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் கோவிலில் கடை வைத்திருப்பவர்கள், தங்கும் விடுதி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய செங்கல்பட்டு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.