சென்னை: தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:  தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 28,711. மேலும், 135 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.

அதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 68,519. தமிழகத்தில் 16 அரசு ஆய்வகங்கள், 9 தனியார் ஆய்வகங்கள் என 25 ஆய்வகங்கள் உள்ளன. இது வரை 19,255 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்றைக்கு புதிதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 21 பேருக்கு நேரடி பாதிப்பு, ஒருவர் வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர். எஞ்சிய 9 பேரும் வெளிநாட்டுக்குச் சென்றவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள்.

இன்று அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9, சென்னை 5, தஞ்சாவூர் 4, தென்காசி 3, மதுரை 2, ராமநாதபுரம் 2, நாகப்பட்டினம் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர், சேலம், சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 31 பேரில் 15 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள். மேலும், 8 பேர் அறிகுறிகளுடன் உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் குழந்தைகள் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 23. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 81. உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.