சென்னை

ள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிடத் தடை விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

முந்தைய ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.  உச்சநீதிமன்ற உத்தரவின்படி சமீபத்தில் தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன.  இந்நிலையில் நேற்று தமிழக மாநில தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 அந்த அறிவிப்பில், “சமீபத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்கள்  மற்றும் 28 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும்.

பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலினை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்  மாவட்ட ஊராட்சி செயலாளரிடமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்/ ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தினை உரிய அலுவலரிடம் தாக்கல்  செய்ய வேண்டும்.  மேலும் தேர்தல் செலவு கணக்குத் தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலைத் தொடர்புடைய அலுவலரிடமிருந்து வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருங்காலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆக்கப்படுவார்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.