சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினிக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கிய நிலையில், இன்று மேலும் 3 வாரம் பரோல் நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தனது மகள் ஹரித்ராவின்  திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதம் பரோல் கேட்டிருந்த நிலையில், அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த (ஜூலை) மாதம் 25ந்தேதி பரோலில் வெளியேறியவர்,.  வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டில் தனது தாய் மற்றும் தங்கையுடன் தங்கி உள்ளார்.

இந்த நிலையில், தனது மகள் ஹரித்திராவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு தமிழகஅரசு பதில் அளிக்க நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார்  அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவைத் தொடர்ந்து, நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.