நாகை: இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள்  3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில்  மீன்பிடித்துக்கொண்டிருந்னர். அப்போது அங்கு வந்த  இலங்கை கடற்கொள்ளையர்கள், அவர்களை தாக்கி, படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி, டீசல் பேரல் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அந்த படகில் இருந்த  புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து, ராஜேந்திரன் ஆகியோரையும் ரப்பர் கட்டை, இரும்பு பைப், அரிவாள் போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்கள், கொள்ளையர்களால் தாக்கப்பட்ட புஷ்பவனம் பகுதி மீனவர்களை மீட்டு ஆ  ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு அழைத்து வந்தனர். காயமடைந்த  3 மீனவர்களும் வேதாரண்யம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையனர், சம்பவம் குறித்து விசாரித்து, நடவடிககை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.  இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.