மும்பை

காராஷ்டிர தலைநகர் மும்பையில் ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரவின் தலைநகர் மும்பையின் சான்டாக்ரூஸில் ‘கேலக்ஸி ஓட்டல்’ செயல்பட்டு வருகிறது. இன்று மதிய வேளையில் அந்த ஓட்டலின் 3-வது தளத்தில் திடீரென்று தீப்பிடித்துள்ளது. அந்த தீ வேகமாக எரிந்து மற்ற இடங்களுக்கும் பரவி பலர் சிக்கி கொண்டனர்.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுத் தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்து அதில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள வி.என். தேசாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்தில் சிக்கி இருந்த மேலும் 6 பேரைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்பதால் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் ரூபல் கஞ்சி, கிஷன் மற்றும் கோர்தன் வரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.