முசாபர் நகர்

ரு முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகார்த்தில் உத்தரப் பிரதேச அரசு அந்த பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்து தவறாகக் கூறி வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்துள்ளான்.  அவனது  ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை அழைத்து மாணவன் கன்னத்தில் அறையும் படி கூறியதுடன் மத ரீதியிலும் அந்த மாணவரை விமர்சித்ததாக கூறப்படுகிறது.

மாணவனின் உறவினர் இந்த நிகழ்வைத் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியை மீது வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை மதரீதியிலாக விமர்சித்து சக மாணவர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியை திருப்தி தியாகி,

“எனது தவற்றை நான் ஏற்றுக கொள்கிறேன். ஆனால் இதற்காக நான் வெட்கப்பட மாட்டேன். அந்த மாணவனை மத ரீதியில் துன்புறுத்த வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. இந்த சம்பவம் தேவையில்லாமல் பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டு இருக்கிறது,”

என்று தெரிவித்துள்ளார்.

மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகப் பள்ளி மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதனால் பள்ளியைத் தற்காலிகமாக மூடுவதற்கு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்தப் பள்ளி மூடப்படுவதை தொடர்ந்து, அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் வேறு பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.